உள்நாட்டு செய்திகள்புதியவை

கல்முனை உண்ணாவிரத போராட்டம் – 2 மணிவரை காலக்கெடு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரத போராட்டம் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இன்றும் தீர்வு கிடைக்கவில்லையாயின் பிற்பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் அளவுக்கு செய்தி ஒன்றை வழங்கவுள்ளதாக கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ.ஸ்ரீ.க.கு.சச்சிதானந்தம்சிவம் குருக்கள், ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இரண்டாவது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அம்பாறை அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் , கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திரு.அதிசயராஜ் ஆகியோருடன் பிரதேசத்திறக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டகாரர்களுடன் கலந்துரையாடினார்கள்.

அரச உயரதிகாரிகளுக்கு பதிலளித்த போராட்டகாரர்கள் நாங்கள் இனவாத குழப்பங்களை உருவாக்க இங்கு பட்டினியுடன் அமரவில்லை. இந்த நல்லாட்சி எங்களை ஏமாற்றி விட்டது. சகல வளமும் மிக்க செயலகமாக இந்த செயலகத்தை தரமுயர்த்தி தர வேண்டும்.

அதுவரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். அரச வர்த்தகமானி வரும்வரை காத்திருக்கிறோம். எங்கள் மக்களுக்கு அரசு அவர்களின் உரிமைகளை தர முன்வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க