உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மைத்திரி, ரணில் சண்டையால் நாட்டுக்கு ஆபத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது பதவி நிலையை மறந்து, போட்டி அரசியலில் ஈடுபடுவதானது நாட்டுக்கே பேராபத்தாக அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் இன்று (18) சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கட்சி அரசியலைக் கைவிடுத்து எஞ்சியுள்ள காலப்பகுதியிலாவது நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி இருவரும் செயற்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்படும் தமிழ் சின்னத்திரை நாடகங்களில் காலை முதல் மாலை வரை மாமியும், மருமகளும் முட்டிமோதிக்கொள்வார்கள். வீட்டின் சாவிக்கொத்தை கைப்பற்றுவதற்கு மருமகளும், அதை தக்கவைத்துக்கொள்வதற்கு மாமியாரும் படாதபாடு படுவார்கள். இதனால் வீட்டில் நிம்மதி நிலைக்காது.
இதுபோல்தான் ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது மோதலில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கிடையிலான நீயா, நானா என்ற அதிகாரப்போட்டியால் நாட்டில் அரசியல் குழப்பம் தலைதூக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாலர் வகுப்பு மாணவர்போல் செயற்பட்டுவருகிறார். பிரதமரை கடுப்பாக்குவதற்காக அமைச்சரவையைக் கூட்டப்போவதில்லை என்றெல்லாம் உளறிவருகிறார்.
நாடாளுமன்றமும், அமைச்சரவையும் ஜனாதிபதியினதோ அல்லது பிரதமரினதோ குடும்பச்சொத்து கிடையாது. நான் முன்னர் கூறியதுபோல் மாமிக்கும், மருமகளுக்குமிடையில் சண்டை ஏற்பட்டால்கூட அதனால் இரண்டு குடும்பங்கள்தான் பாதிக்கப்படும்.
ஆனால், ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையிலான மோதலானது ஒட்டுமொத்த இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கு பொறுப்புவாய்ந்த பதவியில் இருப்பவர்கள் முற்படக்கூடாது.
ஒக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சி, 21/4 தாக்குதல் போன்றவற்றால் இலங்கையில் இன்னும் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்படவில்லை. இதனால் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது.
இந்நிலையில் இரு தலைவர்களுக்கிடையிலான முறுகலானது, அரசியல் ஸ்தீரமற்ற தன்மையை மேலும் நீடிக்கச்செய்யும்.
ஆகவே, அதிகாரப்போட்டியைக் கைவிடுத்து, நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தைக்கருத்திற்கொண்டு செயற்படமுன்வருமாறு இருவர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.’’ என்றார் வேலுகுமார் எம்.பி.

கருத்து தெரிவிக்க