உள்நாட்டு செய்திகள்புதியவை

ஐ.தே.க. தலைமையிலான புதிய கூட்டணி செப்டம்பரில் உதயம்!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் செப்டம்பர் மாதம் மலரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

ஜனநாயக  தேசிய முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பங்காளிக்கட்சிகளும் பச்சைக்கொடி காட்டிவிட்டன.

எனவே,  எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.தே.கவின் வருடாந்த மாநாட்டின்போது, புதிய அரசியல் கூட்டணி  உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய,  நவசமசமாஜக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன.

புதிய அரசியல் கூட்டணி அமையும் என நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் அரசியல் சூழ்ச்சி ஏற்பட்டவேளை, பிரதமர் அறிவிப்பு விடுத்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க