உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பில்லியன் செலவில் யாழ் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (30) வடமராட்சியில் இடம்பெற்றது.

யாழ். மக்கள் நீண்ட காலமாக முகங்கொடுத்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்காக 2 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டம் நீர்ப்பற்றாக்குறையினால் மிகுந்த சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் மாவட்டமாகும். இந்த பிரதேசத்தில் 6 அல்லது சிறிய மற்றும் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் எதுவும் காணப்படுவதில்லை. இதனால் 1,012 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இப்பிரதேசத்திற்கு வருடந்தோறும் 1,250 மில்லி லீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றாலும் அந்த நீரை சேகரிப்பதற்கான வசதிகள் எதுவும் இங்கு அமையப்பெறவில்லை. எனவே, இம்மக்களின் நீர்த்தேவை நிலத்தடி நீரை அடிப்படையாகக் கொண்டே பூர்த்தி செய்யப்படுகின்றது.

வருடாந்த மழைவீழ்ச்சியின் ஒரு பகுதி மாத்திரம் குடா நாட்டில் அமைந்துள்ள வடமராட்சி, உப்பாறு மற்றும் ஆனையிறவு ஆகிய 3 களப்புகளில் தங்கியிருப்பதுடன், அந்த நீரும் எவ்வித தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாது 39 மில்லியன் கனமீற்றர் நீர் பயனின்றி கடலுக்கு செல்கின்றது.

யாழ். குடா நாட்டின் வருடாந்த நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்கு 18.28 கனமீற்றர் தேவையாகவுள்ளது. அந்த நீரை மிக இலகுவாக மேற்குறிப்பிட்ட நீரினூடாக பூர்த்திசெய்வதற்கான ஆற்றல் காணப்படுவதுடன், அதன் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினை 2 வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் பீ.ஹரிசன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தல் ஆரம்பமான சர்வதேச வடக்கு நீர் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

வட மாகாணத்தின் பேண்தகு நீர் முகாமைத்துவம் தொடர்பான இந்த மாநாடானது இன்றும் நாளையும் இடம்பெறுவதுடன், வட மாகாண மக்கள் முகங்கொடுக்கும் நீர்ப் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆய்வு செய்தல் அதற்காக வழங்கக்கூடிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுகளை கண்டறிதல், உத்தேச நீர் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இந்த மாநாட்டினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மாநாட்டு மண்டபத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதியை கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.

மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

கருத்து தெரிவிக்க