உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பமானது.

´தொட்டனைத்தூறும் மணற்கேணி´ என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா நேற்று (23) ஆரம்பமானது.

வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் திருக்குறள் புத்தகம் மற்றும் திருக்குறள் ஸ்டிக்கர் என்பன வெளியிடப்பட்டதுடன் நிகழ்வில் ஆளுநரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் இருவருக்கு திருக்குறள் படம் ஆளுநரினால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆளுநர் உரையாற்றுகையில், முல்லை மாவட்டம் தண்ணீரை கடந்து குருதியிலே நடந்து தீயை கண்டு தீண்டாமையை கண்டு இன்னும் வாழமுடியும் என்று சொல்லும் மாபெரும் மாவட்டம் ஆகும். நான்கு இராணுவங்கள் கடந்து சென்றும் எங்கள் வாழ்க்கையை யாரும் பறித்துக்கொள்ளமுடியாது என்று உலகிற்கு சொல்கின்ற மக்கள் இங்கு இருக்கின்றனர்.

அதனால் தான் ஜனாதிபதியை 3 முறை இந்த மண்ணிற்கு கொண்டுவந்துள்ளேன். முல்லையில் இருக்கும் வேதனையை வெளிப்படையாக சொல்லமுடியாவிட்டாலும் மிகவும் அறிந்தவர் ஜனாதிபதி. அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு இருக்கின்றோம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரை பற்றி பல்கலைக்கழகம் அதிகளவில் ஆராய வேண்டும் அதுவே என் வேண்டுகோள். நான் அறிந்தவரையில் யாழ் பல்லைக்கழகத்தில் திருவள்ளுவரையோ திருக்குறளையோ பற்றி கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. இது ஒரு மாபெரும் குறை.

இந்த விழா முடியும் போது திருக்குறளுக்கான பாடநெறியை பல்கலைக்கழக ரீதியில் முன்வையுங்கள் இதுவே என் வேண்டுகோள். இந்த யோசனையை நான் ஆதரிக்க விரும்புகின்றேன்.

அதற்கான நிதியை தர முன்வருகின்றேன் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார். மேலும் நவம்பர் மாத இறுதியிலே நாங்கள் சர்வதேச தமிழ்தினம் கொண்டாட வேண்டும் என்ற விருப்பம் உண்டு என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வவுனியா (24) , மன்னார் (25), கிளிநொச்சி(26) , தென்மராட்சி (27) இபருத்தித்துறை பிரதேச செயலகம் (28), இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியிலும் (29) இறுதி நாளான 30 ஆம் திகதி யாழ். மாநகர சபை மண்டபத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க