உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை – இரு வாரங்களில் அமைச்சரவைப் பத்திரம்!

” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை, இன்னும் இரு வாரங்களுக்குள், அமைச்சரவையில் நான் சமர்பிக்க உள்ளேன்.” – என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மெகசின் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான தேவதாசனை அமைச்சர் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன், உணவுதவிர்ப்பு போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ,

” தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை, இன்னும் இரு வாரங்களுக்குள், அமைச்சரவையில் நான் சமர்பிக்க உள்ளேன்.

எனது இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு, நான் தந்த ஒரு கிண்ணம் நீரை அருந்தி, தேவதாசன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட சம்மதித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக, சமர்பிக்கப்பட உள்ள, இத்தகைய ஒரு அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள செய்ய அனைத்தையும் நான் செய்வேன்.

இதற்கு தேவையான அரசியல் சூழல் நாட்டிலும், அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் விதத்தில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகிறேன்.” என்று  தெரிவித்தார்.

 

கருத்து தெரிவிக்க