உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐ. நாவிற்கு கடிதம்

உள்நாட்டு பொறிமுறையிலோ, அல்லது உள்நாட்டின் கூட்டுப் பொறிமுறையிலோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து இன்று வியாழக்கிழமை (11) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.

இதன் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மஹஜரிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகளாகிய நாம் கடந்த காலங்களில் நடைபெற்ற இறுதி யுத்த போரினால் எமது உறவுகளை தொலைத்த நிலையில் பல தடவைகள் எமது உறவுகளுக்காக பல்வேறுவிதமான துன்பங்களை, அனுபவித்துள்ளோம்.

இவற்றை ஐக்கிய நாடுகள் சபையும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் நன்றாக அறிந்துள்ளது.

இதனை கருணையோடு புரிந்துகொண்டு எமக்கு ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.
எமக்கு எவ்வித பாராபட்சமும் இன்றி எம் உறவுகளை மீட்டுத்தரக்கோரி இந்த விண்ணப்பத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

நீண்டகாலபோராட்டத்தின் தொடராக இது அமைகின்றது.

ஓர் உள்நாட்டு பொறிமுறையிலோ, அல்லது உள்நாட்டின் கூட்டுப்பொறிமுறையிலோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதை தங்களுக்கு பொறுப்போடு தெரிவிப்பதற்காகவே இவ்வறிக்கையைச் சமர்ப்பிக்கின்றோம்.

சர்வதேச பிரதிநிதிகளை உள்ளடக்கி நீதி, நேர்மை பொருந்திய ஒரு பொறிமுறையின் மூலமே இதற்கான ஒரு தீர்வை எம்மால் எட்டமுடியும் என்பது எம் உறுதியான நிலைப்பாடாகும்.

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நாட்டின் தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அனைத்து அமைப்புகளும் பாராமுகமாக காலம் கடத்திக்கொண்டு போவதை, பாதிக்கப்பட்ட எங்களால் ஏற்கமுடியாது.

மேலும், காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதில் எமக்கு பல கேள்விகள் உள்ளன. கடந்த கால ஆணைக்குழுக்கள் போன்று தான் செயற்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

மேலும் ஓ.எம்.பி இல் சர்வதேச நீதியாளர்கள் உள்வாங்கப்பட்டு நீதி முறைமைகளுடனான விசாரனை நடாத்தப்பட வேண்டும்.

உள்ளக விசாரணை ஊடாக அல்லது இணைந்த பொறிமுறை ஊடாக இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியையோ, தீர்வையோ பெற்றுத்தர முடியாதுபோயுள்ளது.

ஆகவே சர்வதேச தரத்திலான விசாரணையே எங்களுக்கு வேண்டும் என அனைவரும் வலியுறுத்துகின்றோம் என குறித்த மஹஜரில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க