உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் 2389 சந்தேக நபர்கள் கைது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மொத்தம் 2389 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நலின் பண்டாரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகால நிலையை ஒரு மாதத்திற்கு நீடித்துள்ளமை தொடர்பிலான விவாதத்தைத் இன்று ஆரம்பித்து வைத்த அமைச்சர் நலின் பண்டாரா,  கைது செய்யப்பட்டவர்களில் 236 பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 189 பேர் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதில், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள 189 பேரில், மூன்று பேர் அவசரகால விதிமுறைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் பயங்கரவாத தடுப்பு (பி.டி.ஏ) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, 425 சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 263 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த போதுமான ஆதாரங்கள் உள்ளன.

சந்தேகநபர்களில் 94 பேர் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் 42 சந்தேக நபர்களின் விபரங்களை சட்டமா அதிபருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஏழு சந்தேக நபர்கள் குற்றச்சாட்டு இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில்  2389 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க