உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மைத்திரி பக்கமே நிற்பேன் – ராஜபக்சக்களை கைவிட்டார் வெல்கம!

” ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் வெளியான பின்னரே எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என குமார வெல்கம திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

அத்துடன், கோட்டாபய சர்வாதிகாரி என்றும், இலங்கைக்கு இராணுவ ஆட்சி தேவையில்லை என்றும்கூட அவர் கருத்து வெளியிட்டிருந்தார். கோட்டாவால் வெற்றி பெற முடியாது எனவும் அடித்து கூறியிருந்தார்.

மஹிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசியும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினருமான குமார வெல்கமவின் இத்தகைய கருத்துகளானவை கூட்டு எதிரணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனால் கூட்டு எதிரணியின் பதுளை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பக்கம் மீண்டும் சாய்ந்த குமார வெல்கம, மைத்திரிக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில் தற்போது கோட்டாவின் பெயரை மஹிந்த அணி அறிவித்துள்ளது. எனவே, இது தொடர்பில் குமார வெல்கமவின் நிலைப்பாடு என்னவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த  வெல்கம,

” ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் தீர்மானத்தை அறிவிக்கும்வரை காத்திருக்கின்றேன்.  அதன்பின்னரே எனது முடிவை அறிவிப்பேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான முடிவை எடுத்தால் அவருடன் இருப்பேன். அவரால் எடுக்கப்படும் முடிவுடன் எனக்கு இணக்கப்பாடு  இல்லையேல் இணைந்து பயணிக்கமாட்டேன்.” என்று குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க